எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது வட மாகாணத்தைப் பிரதி நிதித்துவம் செய்யும் முதலமைச்சர் வேட்பாளராக யாழ் மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் களமிறக்கப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

வடக்கு மாகாணத்தில் மணிவண்ணனுக்கு அதிகரித்துவரும் ஆதரவு அலையின் அடிப்படையில் இந்த முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயர் குறிப்பிடவிரும்பாத முக்கிய உறுப்பினர் கூறியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதுதொடர்பான உள்ளகப் பேச்சுவார்த்தையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் எனினும், அக் கட்சியின் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவருவதாகவும் அவர் கூறுகின்றார்.

எது எவ்வாறாயினும் கட்சிக்குள் எதிரும் புதிருமாகவுள்ள இரு அணியினரிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும்பொருட்டே பொது வேட்பாளராக மணிவண்ணன் களமிறக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இதுகுறித்து யாழ் மேயர் மணிவண்ணனின் நிலைப்பாடு என்னவென்பது குறித்து அவர் தகவல் தர மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.