உக்ரைன்மீதான ரஷ்ய போர் இன்று 4 ஆவது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது. உக்ரைன் மீது ரஷியா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி போரைத் தொடங்கியது. 3 மாதமாக இந்தப் போர் நீடித்து வருகிறது.

உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுபோலை ரஷியா முழுமையாக கைப்பற்றியது. 3 மாத கால போரில் இந்த நகரத்தின் கட்டிடங்கள், ரஷிய படைகளின் தாக்குதலில் எலும்புக்கூடுகளாக காட்சியளிக்கின்றன. இந்த நகரத்தில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல இரண்டு மாதங்களுக்கு முன் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் தப்பித்ததாகவும் உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது வயிற்றில் இருந்து திரவத்தை அகற்ற சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவின் தலைவர் கைரைலோ புடானோவ் கூறியதாவது: ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கு இடையே உள்ள கருங்கடலுக்கும், ரஷியாவின் காஸ்பியன் கடலுக்கும் இடையே உள்ள காகசஸ் என்ற இடத்தில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி நடந்தது. பிப்., 24ல் உக்ரைன் மீது ரஷியா போர் துவங்கிய பின் இந்த முயற்சி நடந்தது. அதில் புடின் மீது தாக்குதல் நடந்தது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.