” அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்படும். அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம்.” – என்று ஆளுங்கட்சியின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீது நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தமது ஆதரவை மொட்டு கட்சி உறுப்பினர்களான அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ஹிந்தானந்த அளுத்கமகே, பிரேம்நாத் சி தொலவத்த ஆகியோர் உறுதிப்படுத்தினர்.

விவாதத்தில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே,

” 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை பயன்படுத்தி மொட்டு கட்சிக்குள்ளும், அரசாங்கத்துக்குள்ளும் பிளவை ஏற்படுத்துவதற்கு எதிரணிகள் முயற்சித்தன. ஆனால் 22 நிறைவேறும். இதன்மூலம் எதிரணிகளின் கனவு கலைக்கப்படும். ” – என்றார்.

” 22 நாளை (இன்று) நிறைவேற்றப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கின்றேன். அதனை குழப்பியடிக்க எவரும் இல்லை.” என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

அதன்பின்னர் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த,

” குழப்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு எதிரணிகள் முயற்சிக்கின்றன. அதற்கு இடமளிக்கமாட்டோம். இரட்டை குடியுரிமை தடைக்கு ஆதரவாக வாக்களிப்போம். பஸில் ராஜபக்சவுக்கு தேவையெனில் அவர் குடியுரிமையை துறந்துவிட்டு வரட்டும்.” – என்று குறிப்பிட்டார்.