நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கப்பட்டதையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை அமெரிக்கா சென்றார் என்று விமான நிலைய குடிவரவுத் திணைக்களத்தின் பேச்சாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 3.50 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானம் ஊடாக கே.ஆர். – 663 இல் கட்டாரின் டோஹாவுக்கு ரஞ்சன் ராமநாயக்க புறப்பட்டார்.
அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அவர் அமெரிக்கா செல்கின்றார்.

அமெரிக்காவில் சுமார் 10 இசை நிகழ்வுகளிலும், கனடாவில் 5 இசை நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க நேற்றுமுன்தினம் இரவு அமெரிக்கா செல்வதற்காகக் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். ஆனால், நீதிமன்றத்தால் அவருக்கு விதிக்கப்பட்ட விமானத் தடை காரணமாக மீண்டும் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.