மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அமல்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு என்ற வரிசையில் இப்போது ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்ற கோஷத்தை மத்திய அரசு முன் வைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடந்த மாநில உள்துறை மந்திரிகளின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது, நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது சட்ட அமலாக்க பிரிவினருக்கு ஒரு பொதுவான அடையாளத்தை அளிக்கும். இதன்மூலம் காவல்துறை பணியாளர்களை எளிதில் அடையாளம் காணமுடியும். ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்பதை உங்கள் கவனத்துக்கு ஒரு சிந்தனையாக முன் வைக்கிறேன், என்றார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
பிரதமரின் இந்த யோசனைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசு தனது அதிகாரத்தை ஒரு குடைக்குள் கொண்டு வந்து, மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க நினைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்தியாவில் காவல்துறை என்ற அமைப்பு 1891-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது. இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்) அதிகாரிகள் அணிய வேண்டிய சீருடை தொடர்பாக மத்திய அரசு விதிகளை உருவாக்கி உள்ளது.

அதே நேரத்தில் இந்திய காவல் பணியை சாராத போலீசாரின் சீருடைகளை அந்தந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களுக்கு தகுந்தாற்போல் வடிவமைத்து கொள்கின்றன. நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் தமிழகத்தில் போலீசாரின் சீருடைகளில் மாற்றம் கொண்டு வரப்படவில்லை. ஏட்டுகள்’ தலைமை ஏட்டுகள், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை அரைக்கால் சட்டை மற்றும் நீளமான தொப்பி அணிந்து பணியாற்றி வந்தனர். 1973-ம் ஆண்டு தமிழகத்தில் போலீசாரின் சீருடையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

வேறுபாடு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு போலீசாரின் காக்கி சீருடையும், போக்குவரத்து போலீசாரின் வெள்ளை நிற சட்டையும், காக்கி ‘பேண்ட்’டும் அணிந்து பணியாற்றி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் போலீசார் வெள்ளை நிற சீருடையிலும், புதுச் சேரியில் காக்கி சீருடையுடன் சிவப்பு நிற தொப்பியும் அணிகிறார்கள். இதே போல், டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகம், மராட்டியம், ஜம்மு-காஷ்மீர் என ஒவ்வொரு மாநிலங்களிலும் போலீஸ் சீருடைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்ப வெட்ப நிலை, கலாசாரம், மாநில கொள்கை உள்ளிட்ட பல்வேறு சூழலுக்கு ஏற்ப போலீசாரின் சீருடைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில், மத்திய அரசு இப்போது முன் வைத்துள்ள ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்ற யோசனை சாத்தியமா? என்பது குறித்து கர்நாடகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்னர். அதன் விவரம் வருமாறு:-

போலீஸ் துறையின் வளர்ச்சிக்கு…

ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பாஸ்கர் ராவ், “நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடை அணிய வேண்டும் என்று மத்திய அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளது. நமது நாட்டில் இது சாத்தியமில்லை. ஏனெனில் ஒவ்வொரு மாநிலத்தின் தட்ப வெட்ப நிலையை கருத்தில் கொண்டு போலீசார் சீருடை அணிகிறார்கள். புதுச்சேரியில் ஒரு விதமான சீருடை, உத்தரபிரதேச மாநிலத்தில் வேறு மாதிரியான சீருடை இருக்கும். எனவே தேவையில்லாமல் போலீசாரின் சீருடையை மாற்றுவதை கைவிட வேண்டும். பா.ஜனதா ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்கள் முதலில் இதனை ஏற்க சாத்தியமில்லை.

இது தேவையற்றது. உடை விவகாரத்தில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, போலீஸ் துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடையை மாற்றுவதால் மக்களுக்கு ஏதேனும் பயன் உண்டாகுவதில்லை. போலீஸ் துறைக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்து, அதன்மூலம் மக்களுக்கு என்ன பயன் ஏற்படுகிறது என்பது தான் முக்கியம்” என்றார். நல்லத்திட்டம்

ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சுனில்குமார், “கர்நாடகம் உள்பட பிற மாநிலங்களில் போலீசார் அணியும் சீருடை பல்வேறு விதமாக இருக்கிறது. தற்போது ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்ற திட்டத்தின் கீழ் அனைத்து போலீசாரும் ஒரே மாதிரியான சீருடை அணியும் திட்டம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த ஒரு நல்ல திட்டம். நாடு முழுவதும் போலீசார் ஒரே சீருடையை அணியலாம். அவ்வாறு அணிந்தால் சிறப்பாக இருக்கும் ” என்றார்.

கர்நாடக தொப்பிக்கு தனிச்சிறப்பு

ஓய்வு பெற்ற போக்குவரத்து உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர ஆச்சார்யா, “பிரதமர் கொண்டு வந்துள்ள திட்டமும், அவரது எண்ணங்களும் சிறப்பானது தான். ஒவ்வொரு மாநிலத்தின் போலீசாருக்கும் தனிப்பெருமை இருக்கிறது. கர்நாடக போலீசாரின் சீருடை, தொப்பி தனிச்சிறப்பானது. இதனை வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆச்சரியமாக பார்ப்பார்கள். தமிழ்நாட்டில் உதவி சப்-இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களின் சீருடை ஒரே மாதிரியாக இருக்கும்.

கர்நாடகத்தில் ஒவ்வொரு போலீசாரின் சீருடை மாறுபடும். அதன்மூலம் சப்-இன்ஸ்பெக்டர் யார்? என்பதை அடையாளம் காணலாம். காக்கி சீருடைக்கு என்று தனி மதிப்பு உள்ளது. கர்நாடக போலீசாருக்கு கிடைக்கும் சலுகைகளை விட மற்ற மாநிலங்களை சேர்ந்த போலீசாருக்கு கிடைக்கும் சலுகைகள் அதிகம். எனவே போலீசாருக்கு உதவும் விதமாக மத்திய அரசு அனைத்து மாநில போலீசாருக்கும் ஒரே சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கலாம். ராணுவத்தினரை போன்று போலீசாருக்கும் சலுகைகள் கிடைக்க திட்டம் கொண்டு வரலாம்” என்றார்.

சாத்தியமாக்கலாம்

இதுபற்றி மங்களூரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் ராமர் கூறுகையில், “நாடு முழுவதும் பணியாற்றும் போலீசாருக்கு ஒரே சீருடை அணிய வேண்டும் என்ற திட்டம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்து உள்ளார். இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். அனைத்து மாநில போலீசாரும் ஒரே சீருடை தான் அணிய வேண்டும் என்பது சாத்தியமா என்றால், அதனை சாத்தியமாக்கலாம். ஒவ்வொரு மாநிலத்தின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு போலீசார் சீருடை அணிந்து கொண்டாலும், நிறம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். தட்ப வெட்ப நிலைக்கு தகுந்தபடி வேறு உடை அணியலாம்.

போலீசாரின் சீருடை ஒரே நிறமாக இருந்தால் சிறப்பாக இருக்கும்” என்றார். ஓய்வு பெற்ற உதவி அஞ்சலக அலுவலர் அதிகாரி கருணாநிதி கூறும் போது, “மத்திய அரசு போலீசாருக்கு ஒரே சீருடை திட்டம் கொண்டு வருவதற்கு முன்வந்துள்ளது. இதுபற்றி மத்திய அரசு அறிவித்த பின்பே அனைத்து மாநிலங்களிலும் விவாதம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை கொண்டு வருவது சாத்தியமற்றதாகும். ஏனெனில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உரிமை உள்ளது. இது மாநில உரிமைகள் சம்பந்தப்பட்டதாகும். தமிழ்நாட்டின் சீருடைக்கு ஒரு சிறப்பு உள்ளது. பஞ்சாப் மாநில சீருடை வேறு மாதிரி இருக்கும். மத்திய அரசின் இந்த திட்டம் மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் விதமாக இருக்கிறது. இது தேவையற்றதாகும்” என்றார்.

பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடையில் பல மாற்றங்கள் உள்ளன. பெங்களூருவில் சட்டம்-ஒழுங்கு போலீசார் காக்கி சீருடையும், போக்குவரத்து போலீசார் வெள்ளை நிற சீருடையும், கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை காக்கி சீருடையையும், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனியாக சி.சி.பி. என்று பொரிக்கப்பட்ட ெஜர்கீனையும் அணிகிறார்கள். அதாவது மத்திய குற்றப்பிரிவு போலீசாரை தனியாக காட்டி கொள்ளும் விதமாக சீருடைக்கு மேல் சி.சி.பி. என்ற வாசகத்துடன் கூடிய கருப்பு நிற ெஜர்கீன் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.