ஒரு திரைப்படத்தில் ஹீரோ, ஹீரோயின் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியமானவர்கள் படத்தின் சப்போர்ட்டிங் கேரக்டர்கள். எமோஷனல் சீனாக இருக்கட்டும், காமெடி சீனாக இருக்கட்டும் இவர்கள் சரியாக நடித்தால் தான் அந்த காட்சி ரசிகர்களிடையே செல்லுபடி ஆகும். இவர்கள் கொஞ்சம் சொதப்பினாலும் கோவிந்தா தான். இதில் சில சப்போர்டிங் ஆர்டிஸ்டுகள் ஹீரோக்களை மிஞ்சும் அளவிற்கு நடித்து விடுவார்கள்.

கிஷோர் குமார்: கிஷோர் தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களிலும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 2007 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் தான் இவருக்கு முதல் தமிழ்ப்படம். வெண்ணிலா கபடிக் குழு, ஆடுகளம், வம்சம், ஹரிதாஸ் போன்ற படங்களில் இவருடைய நடிப்பு கவனிக்கத்தக்கதாக இருக்கும்.

ஹரிஷ் உத்தமன்: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் ஹரிஷ் உத்தமன். தமிழில் பாண்டியநாடு, கௌரவம், மீகாமன் போன்ற படங்கள் இவர் நடிப்பில் குறிப்பிடத்தக்கவை. இதில் பாண்டியநாடு திரைப்படம் ஹரிஷ் உத்தமனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஜார்ஜ் மரியான்: ஜார்ஜ் மரியான் நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். அழகி படத்தில் கணக்கு வாத்தியாராக இவர் நடித்தக் காட்சி யாராலும் மறக்க முடியாது. பெரும்பாலும் சுந்தர் சி, ஏ எல் விஜய் படங்களில் நடித்திருக்கிறார். சொல்ல மறந்த கதை, தெய்வ திருமகள், மதராசப்பட்டினம் போன்ற படங்கள் இவர் நடிப்பில் குறிப்பிடத்தக்கவை.

இளங்கோ குமரவேல்: இளங்கோ குமரவேல் திரைப்பட நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். கல்கியின் பொன்னியின் செல்வன் படமானதற்கு இவரும் முக்கிய காரணம். 2001 ஆம் ஆண்டு மாயன் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அபியும் நானும், காற்றின் மொழி படங்கள் இவரின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தின.

எம் எஸ் பாஸ்கர்: உலகநாயன் கமலஹாசன் வியர்ந்து பார்த்த நடிகர் என்றால் அது எம் எஸ் பாஸ்கர். குணச்சித்திர கேரக்டர், காமெடியன், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முகத் திறமை கொண்டவர் எம்.எஸ்.பாஸ்கர். சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் ஒற்றை காதை மூடிக்கொண்டு அபத்தமாக பேசி அடிவாங்கும் பட்டாபியை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.