மத்திய வருவாய் நுண்ணறிவு இயக்குனரகத்தின் 65-வது நிறுவன தின கொண்டாட்டங்கள் இன்று நடந்தன. இதில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அவர் 2021-2022-ம் ஆண்டிற்கான இந்திய கடத்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசினார். அதில், நாட்டில் தங்க கடத்தல் அதிக அளவில் அதிகரித்து உள்ளது என்று அவர் சுட்டி காட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையின்படி, 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022-ம் ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் 160 தங்க கடத்தல் சம்பவங்கள் நடந்து உள்ளன. இவற்றில் மொத்தம் 833.07 கிலோ அளவுக்கு தங்கம் கடத்தப்பட்டு உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சர்வதேச அளவில் ரூ.405.35 கோடியாகும். இந்த கடத்தலில், அதிக அளவாக, கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பரில் முறையே 25 மற்றும் 22 கடத்தல் சம்பவங்கள் நடந்து உள்ளன.

அதற்கு அடுத்து நடப்பு ஆண்டின் மார்ச்சில் 22 தங்க கடத்தல் சம்பவங்கள் நடந்து உள்ளன. இவற்றில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த 22 சம்பவங்களில் 144.43 கிலோ தங்கம் கடத்தப்பட்டு இருந்தது அதிக அளவாகும். அதற்கு அடுத்து கடந்த ஆண்டு ஜூலையில் 11 சம்பவங்களில் 120.52 கிலோ தங்கமும் கடத்தப்பட்டு இருந்தன.

இதுபற்றி மந்திரி கூறும்போது, ஓராண்டில் சராசரியாக 800 கிலோ கடத்தல் தங்கம் கண்டறியப்பட்டால், அது நிச்சயம் அறை ஒன்றிற்குள் யானையை அடைப்பது ஆகும் என கூறினார். கொரோனா பெருந்தொற்று பயண கட்டுப்பாடுகள் எளிமையாக்கப்பட்ட பின்னர் நாட்டில், அதிகளவிலான தங்க கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன என அறிக்கை வழியே தெரிய வந்துள்ளது.

இதே காலகட்டத்தில் கோக்கைன் வகை போதை பொருட்கள் 310 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுவும், அதற்கு முந்தின 2020 மற்றும் 2019 ஆகிய இரு ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட முறையே 8.6 கிலோ மற்றும் 1.1 கிலோ என்ற அளவை விட மிக அதிகம் ஆகும்.

இதுதவிர, மத்திய வருவாய் நுண்ணறிவு இயக்குனரகம் அதே 2021-2022 ஆகிய ஆண்டு காலகட்டத்தில் 27 மெட்ரிக் டன் போதை பொருட்களை கைப்பற்றி உள்ளது.

இவற்றில் மத்திய பிரதேசத்தில் 5,846 கிலோ, திரிபுராவில் 4,264 கிலோ மற்றும் உத்தர பிரதேசத்தில் 3,141 கிலோ அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில், ஊரடங்கால் பொருளாதார மந்தநிலை, வருவாய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் மறுபுறம் ஜரூராக நடந்து வந்துள்ளது அறிக்கையின் வழியே தெரிய வருகிறது.