ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,எனக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடுகள் ஏதும் கிடையாது, கொள்கை ரீதியில் மாத்திரம் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

நல்லாட்சி அரசாங்கத்தில் பண்டாரநாயக்கவின் கொள்கைகளை செயற்படுத்த முனைந்ததால் முரண்பாடுகள் தோற்றம் பெற்றன.இளம் தலைமுறையினர் பண்டாரநாயக்கவின் கொள்கைகளை அறியாமல் இருப்பது பிறிதொரு பிரச்சினையாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற பண்டாரநாயக்கவின் 124 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டப்ள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் பிறந்த தினமான ஜனவரி 08 ஆம் திகதி நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன்.

நல்லாட்சி அரசாங்கத்தில் பண்டாரநாயக்கவின் கொள்கைகளை எனது அரசியல் கொள்கையுடன் ஒன்றிணைத்து,பண்டாரநாயக்கவின் கொள்கைக்கு மாற்று கொள்கையுடன் பயணித்ததால் முரண்பாடுகள் தோற்றம் பெற்றன.இதனை விடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,எனக்கும் நல்லாட்சி அரசாங்கத்தில் தனிப்பட்ட முரண்பாடுகள் ஏதும் காணப்படவில்லை.கொள்கை ரீதியில் பிரச்சினைகள் காணப்பட்டன.

முன்னாள் பிரதமர் எஸ்.டப்ள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க குறுகிய காலம் பதவி வகித்தார்.இவருக்கு இறுதி மரியாதை செலுத்த நான் எனது தந்தையுடன் பொலன்னறுவையில் இருந்து கொழும்புக்கு வருகை தந்து,நீண்ட வரிசையில் இருந்தவாறு பண்டாரநாயக்கவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினேன்.

அப்போது எனக்கு ஆறு வயது.மூன்றரை வருட கால ஆட்சியில் பண்டாரநாயக்க நாட்டில் பல துறைகளில் மாற்றம் ஏற்படுத்தினார்.பண்டாரநாயக்கவின் கொள்கையினால் இலங்கை சர்வதேச மட்டத்தில் நன்மதிப்பு பெற்றது.

பண்டாரநாயக்கவின் கொள்கைகளை தற்போதைய இளம் தலைமுறையினர் அறியாமல் இருப்பது பிரதான பிரச்சினையாக உள்ளது.விடேசமாக காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அறிந்தோ,அறியாமலே பண்டாரநாயக்கவின் கொள்கைக்கு அமைய நாட்டை நிர்வகிக்க வேண்டும் என குறிப்பிட்டார்கள்.அரசியல் மற்றும் பொருளாதார முறைமை மாற்றம் வேண்டும் என இளைஞர்கள் குறிப்பிட்டார்கள்.

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பண்டாரநாயக்கவின் கொள்கையுடன் தீர்வு காண முடியும்.1947 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சி செய்த அரச தலைவர்களில் பண்டாரநாயக்க மற்றும் ஜே.ஆர் ஜயவர்தன ஆகியோர் தூரநோக்கு கொள்கையுடையவர்கள் என குறிப்பிட முடியும்.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைகளை முழு உலகமும் வரவேற்றது.பிளவுபடாத வெளிவிவகார கொள்கையுடன் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தை இவர் முழு உலகத்திற்கும் எடுத்துக்காட்டினார்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க சிங்கள மொழியை அரசமொழியாக பிரகடனப்படுத்தி பாரிய விளைவுகளை ஏற்படுத்தினார் என ஒருதரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.பண்டாரநாயக்கவின் சாபத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்ற உரையின் போது இருமுறை குறிப்பிட்டார்.தற்போதைய பொருளாதார பாதிப்பு,ஏழ்மை உள்ளிட்ட பல பிரச்சினைகளை பண்டாரநாயக்கவின் மீது சுமத்த ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள்.இது வெறுக்கத்தக்கதுடன் முறையற்றது.