மட்டக்களப்பில் சிறிய தாயாரின் 14 வயது மகளான தங்கையை கூட்டிச் சென்று துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞனையும் இளைஞனுக்கு உதவிய அவனது அம்மம்மாவையும் எதிர்வரும் 21 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் குறித்த இளைஞனின் தந்தையார் இரு பெண்களை திருமணம் முடித்ததுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞனின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றதுடன் அவன் தனது அம்மம்மாவுடன் வாழ்ந்து வருகின்றான்.

இந்த நிலையில் தந்தையார் இரண்டாவதாக திருமணம் முடித்த சிறிய தாயாரின் 14 வருடமும் 6 மாதங்களை கொண்ட தங்கையான சிறுமியை அவளது வீட்டில் இருந்து கூட்டி கொண்டு சென்று தனது அம்மம்மா வீட்டில் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் கடந்த 7ம் திகதி சனிக்கிழமை குறித்த இளைஞனையும் அவனது அம்மம்மாவையும் கைது செய்தனர்.

சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப் பட்டனர்.

இதன்போது இருவரையும் எதிர்வரும் 21 ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.