தமிழ் அரசியல் கைதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் குற்றத்திற்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட்ட வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்தன தேரர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

சிறைச்சாலைக்குச் சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகன் ரத்வத்த, தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கு தமது பாதுகாப்புத் துப்பாக்கியினை காண்பித்து அச்சுறுத்தல் விடுத்த சம்பவமானது மிகவும் பாரதூரமான விடயமாகும். இது பாரிய குற்றச்செயலாகும்.

குற்றம் பாரியளவில் செய்யப்பட்டுள்ளது. ஆகவே நீதி நிலை நாட்டப்பட வேண்டும். குற்றத்தினைச் செய்துவிட்டு, பதவியை விலகினால் எல்லாம் சரியாகிவிடாது. குற்றத்திற்கு தண்டனையே வழங்கப்படவேண்டும்.

இல்லை என்றால் எதிர்காலத்தில் நாட்டு மக்களும் குற்றங்களைச் செய்துவிட்டு, அமைச்சர்கள் பாணியில் அவர்களும் செய்ய முற்படுவார்கள். லொகன் ரத்வத்தைக்கு எதிராக உரிய வகையில் சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த அரசாங்கம் இத்தகைய வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருமாயின் இறுதிக் காலத்தில் மக்களின் தாக்கதலுக்கு உள்ளாகித் தான் இறந்து போவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.