சூடான் நாட்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவத்தினர் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் கைப்பற்ற வேண்டும் என்று, போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.சூடான் தலைநகரான கார்டோமில் இருக்கும் அதிபர் மாளிகைக்கு வெளியே, நேற்று (அக்டோபர் 16, சனிக்கிழமை) இந்த போராட்டம் நடந்தது. அந்நாட்டின் அரசியல் சூழல் மோசமடைந்து வருவதால் போராட்டக்காரர்கள் இப்படி ஒரு கோரிக்கையை விடுத்திருக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் அல் பஷீரின் ஆதரவாளர்கள் என்று கூறப்பட்டவர்களின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை முறியடிக்கப்பட்டதிலிருந்து, சூழல் இன்னும் மோசமாகிவிட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஒமர் அல் பஷீரின் ஆட்சி கலைக்கப்பட்ட பின், சுதந்திரம் மற்றும் மாற்றத்துக்கான படை (Forces of Freedom and Change – FFC) என்று அழைக்கப்படும் கூட்டமைப்புதான் சூடானை ஆட்சி செய்து வருகிறது.

இந்த கூட்டமைப்பு தான் பஷீருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. “எங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டும், தற்போதைய அரசு நீதி மற்றும் சமத்துவத்தை எங்களுக்கு வழங்கவில்லை” என ஒரு போராட்டக்காரர் ஏ.எஃப்.பி முகமையிடம் கூறினார்.