பேராசிரியர் பிரபாத் பட்நாயக் (Prabhat Patnaik)

நேட்டோவில் இணையும் உக்ரைனின் நோக்கங்களில் இருந்து எழும் ரஷ்யாவின் பாதுகாப்பு கவலைகள் ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. ஆனால் உக்ரைனுடனான பன்னாட்டு நிதி நிறுவனத்தின் (International Monetary Fund – IMF ஐ.எம்.எப்) பங்கும் அதற்கு இணையான பிரச்சனையாகும். சர்வதேச நிதி நிறுவனத்தை நன்கு அறிந்த வகையில்,  உலகம் முழுவதும் பன்னாட்டு  பெருமூலதனத்திற்கான பொருளாதாரத்தை மூலதனத்திற்கான நட்பு ரீதியான நடவடிக்கை என்ற பெயரால் திறந்து விடுவதற்கான வேலைகளில் அது இறங்குகிறது. தன்னுடைய கடன்களுக்கான நிபந்தனையாக அந்தநாடுகளின் இயற்கை வளங்கள் உலக மூலதனத்திற்காக கையகப்படுத்தப்படுவதை உள்ளடக்குகிறது. நாடுகளின் நிதி நிலையை சரிசெய்வதற்கான தேவைக்காக உதவுவது என்ற பெயரில் கடன் பொறியின் மூலம் நிபந்தனைகளை சுமத்துகிறது.  ஐ.எம்.எப்பின் இந்த பொதுவான பங்கினைத் தவிர சில சந்தர்ப்பங்களில் அமெரிக்காவின் ராணுவ சூழ்ச்சி நோக்கங்களுக்கு உதவிடும் வகையிலும் செயல்படும். உக்ரைன் விசயத்திலும் பொருளாதாரத்தை திறந்து விடுவது என்ற பொதுவான நடவடிக்கையினைத் தவிர ஐ.எம்.எப் குறிப்பிடத்தக்க பங்கினை கிட்டத்தட்ட துவக்கத்திலிருந்தே தொடங்கிவிட்டது.  

2014க்கு முன்பாக உக்ரைன் ஜனாதிபதியாக இருந்த விக்டர் யானுகோவிச் அரசு இருந்த வேளையில் உக்ரைனை  ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தகத்தை இணைப்பதற்கான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ஐ.எம்.எப் பேச்சுவார்த்தையை தொடங்கியது. அப்போதே, நேட்டோவுடன் இணைவது உட்பட  ரஷ்யாவின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை மேற்கொள்ளுமாறு உக்ரைனை ஐ.எம்.எப் கேட்டுக்கொண்டது. இது ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. ஐ.எம்.எப் உடனான பேச்சுவார்த்தையை விக்டர் யானுகோவிச் அரசு முறித்துக் கொண்டது. இது  மன்னிக்க முடியாத ‘குற்றம்’ ஆனது. ஒரு நவ-தாராளவாத ஆட்சியை சுமத்துவதற்கான சர்வதேச மூலதனத்தின் நோக்கத்திலிருந்து தப்பித்தது மட்டுமல்ல;  மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள் – குறிப்பாக அமெரிக்கா மற்றும் நேட்டோவிலிருந்து யானுகோவிச் அரசு தப்பித்தது என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் நேட்டோவும் ஐ.எம்.எப் இரு நிறுவனங்களும் தனித்தனியான அமைப்புக்களாக இருந்தாலும் வேறுபட்டவையல்ல. ஒவ்வொன்றும் அதற்கான தளங்களிலிருந்து ஒரே நோக்கத்திற்காக இயங்குகின்றன. ஐ.எம்.எப் தொடர்பை துண்டித்துவிட்டு அதற்கு பதிலாக ரஷ்யாவுடன் துணிச்சலுடன் நட்பு கொண்ட யானுகோவிச், ஐ.எம்.எப் முடிவின்படி உக்ரைனின் நாஜி ஆதரவு சக்திகளை பயன்படுத்தி அமெரிக்க ஆதரவோடு சதிகளை உருவாக்கி தூக்கியெறியப்பட்டார்.  யானுகோவிச்சின் எதிர்ப்பு சக்திகள் இப்போது உக் ரைன் இராணுவத்தின் ஒருபகுதியாக இணைந்தன. இத்தகைய சக்திகள் உக்ரைன் ராணுவத்தில் இணைக்கப்பட்டதன் விளைவாக  தீவிர வலதுசாரி இராணுவமாக உருவானது.

2014 ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பிறகு உக்ரைனில் ஆட்சிக்கு வந்த வலதுசாரி அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை துவக்கியது. அதற்காக குடிமக்களுக்கு வழங்கப்பட்டுவந்த எரிவாயு மானியத்தை பாதியாக குறைத்தது. இதைக் காரணம் காட்டி ஐ.எம்.எப் லிருந்து 270 கோடி அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றது. ஒப்பீட்டளவில் இந்த கடன் தொகை மிகப் பெரியது. வழக்கமான நடைமுறையினை காட்டிலும் ஆறு மடங்கு அதிகம். இரண்டாவதாக, வழக்கத்திற்கு மாறாக, உள்நாட்டு கலவரத்திற்கு மத்தியில் இந்தக் கடன் வழங்கப்பட்டது. மூன்றாவதாக இவ்வளவு பெரிய கடன் சுமையை உக்ரைனால் திருப்பித் தர முடியாது என்பதை தெரிந்தே கடனை வழங்கியது. அதனை திரும்பப் பெறுவதற்கான ஒரே வழியாக உலக மூலதனத்திற்கு உக்ரைன் பொருளாதாரத்தை திறந்துவிடுவது; நாட்டின் நிலப்பரப்பை – இயற்கை வளங்களை – குறிப்பாக எரிவாயு வளத்தை மூலதனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது என்பதே திட்டம். 2014ஆம் ஆண்டிலிருந்து உக்ரைனின் பொருளாதாரத்தை உலக மூலதனத்திற்காக திறந்து விடுவது என்ற வழக்கமான அம்சங்களோடு கூடுதலாக அமெரிக்காவின் ராணுவ சூழ்ச்சி நோக்கங்களுக்கான உதவி செய்வதிலும் ஐ.எம்.எப் இறங்கியது. சிறுபகுதி கடனைக் காட்டி ஐஎம்எப்  உக்ரைன் நாட்டின் பரந்து பட்ட நிலப்பரப்பையும் இயற்கை வளங்களையும் கைப்பற்றியது. கடனின் பெரும்பகுதி அமெரிக்க நிர்வாகத்தின் விருப்பத்திற்கு – அதாவது உக்ரைனை தனது வட்டத்திற்குள் கொண்டு வரும் விருப்பத்திற்கும்,  கலகத்திற்கு பிறகு உக்ரைனின் செல்வங்களை கொள்ளையடித்து டொலராகவும், யூரோவாகவும் கூட்டுக்களவாணி முதலாளித்துவ சக்திகளுக்கும் கடத்திச் செல்வதற்கும் ஐ.எம்.எப் நிதியினை வாரி வழங்கியது. 

தற்போது ரஷ்யாவின் தாக்குதல் நடக்கும் நிலையில் மீண்டும் ஐ.எம்.எப்பின் உதவியை உக்ரைன் நாடியுள்ளது. ஐ.எம்.எப்பின் நிர்வாக இயக்குநர் கிரிஷ்டாலினா ஜோர்ஜியாவா (Kristalina Georgieva), உக்ரைனுக்கு உதவுமாறு ஐ.எம்.எப் இயக்குநர்களுக்கு பரிந்துரைத்துள்ளார். உக்ரைன் பெரிய அளவிற்கு கடன் உதவியை எதற்காக கேட்டுள்ளது என்பதை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. தற்போதைய நெருக்கடி நிலைமை முடிவிற்கு வந்த பின்னர் எம்மாதிரியான வடிவத்தில், மேற்கொள்வார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஐரோப்பாவில் இரண்டாவது கிரீஸ் நாடாக உக்ரைன் மாறும் என்ற ஒன்று  மட்டும் நிச்சயம். உக்ரைனைப் போலவே நெருக்கடியில் இருந்த கிரீஸ் நாட்டிற்கு வழக்கமான தொகையை காட்டிலும் பலமடங்கு கடனை வழங்கியது ஐ.எம்.எப்.  அந்த கடன்களை அளித்த  ஐரோப்பிய வங்கிகளுக்கு பணத்தை தருவதை உறுதி செய்வதன்பேரில் இப்போது கிரீஸ் நிரந்தரக் கடன் பொறியில் சிக்கியுள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஐ.எம்.எப் அதன் தொடக்க நாட்களில் இருந்து பெரிதும் மாறிவிட்டது. 1944ல் துவக்கப்பட்டபோது அது நாடுகளின் பொருளாதார சுயசார்புக்கான நோக்கத்திற்கானது என்று கூறப் பட்டது. ஆனால் தற்போது ஐஎம்எப், ஒரு நாட்டின் சுய சார்பு பொருளாதார ஆட்சியை அழித்து ஒரு நவ-தாராளவாத ஆட்சியை அமைக்கும் கருவியாக மாறியுள்ளது. அது தற்போது சர்வதேச நிதி மூலதனத்தின் கைகளில் சிக்கியுள்ள ஒரு கருவியாக மாறியுள்ளது. இது உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஊடுருவலாக செயல்படுகிறது. சர்வதேச நிதி மூலதனத்தின் கருவியாகச் செயல்படுவதோடு, மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் நலன்களுக்கான கருவியாகவும் மாறியுள்ளது.