ஜப்பானுடனான நெருங்கிய அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளால் இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பான் பல உதவிகளை வழங்கியுள்ளது. இதனை ஒருபோதும் மறக்கமாட்டோம்.”

இவ்வாறு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஜப்பான தூதுவருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மையில் எடுக்கப்பட்ட சில அரசியல் தீர்மானங்களால் ஜப்பானும், இலங்கையும் கையொப்பமிட்ட முக்கியத்துவமிக்க அபிவிருத்தித் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜப்பான் அரசாங்கத்தின் கடனுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் தாமதமாகி வருவது தொடர்பில் தூதுவரின் கவனத்திற்குக் கொண்டு சென்ற அமைச்சர், விசேட அறிக்கையொன்றையும் கையளித்தார்.

அதேவேளை, திருகோணமலை துறைமுகத்திற்கு அருகாமையில் புதிய கைத்தொழில் பூங்காவிற்காக ஏற்கனவே காணி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஜப்பானிய முதலீட்டாளர்களை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்குமாறும் அமைச்சர் ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.