இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் பல விமான சேவைகள் இரத்து செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

எனினும் அவ்வாறு வெளியாகும் தகவல்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நிலைமையை நிர்வகிப்பதற்கு விமான அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டு விமான நிலையங்களில் எரிபொருளைப் பெறுவதற்கு தொழில்நுட்ப நிறுத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய சில விமானங்களின் நேரம் மற்றும் கால அளவுகளில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த இக்கட்டான நேரத்தில், திட்டமிடப்பட்ட விமான நடவடிக்கைகளை எந்தவித இடையூறும் இன்றி இயக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.