நாட்டு மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து அவ்வாறான ஒருவரை ஜனாதிபதியாக தெரிந்தெடுப்பதே காலத்திற்கு பொருத்தமானது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன்;

எதிர்கட்சிகளை சேர்ந்த வகையிலேயே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்கட்சியாக இருக்கின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, சுயாதீனமாக செயல்படும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இனது பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் ஜனாதிபதி, யார் பிரதமர் என ஒருமித்த கருத்தோடு செயல்படுத்தவும் நாட்டு மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து அவ்வாறான ஒருவரை ஜனாதிபதியாக தெரிந்தெடுத்து ஜனாதிபதி மற்றும் பிரதமராக நியமிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்த எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து தொடர்ச்சியாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

சஜித் பிரேமதாச வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிட்டால் அவருக்கு உங்கள் தரப்பு வாக்களிக்குமா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளித்த ரிஷாத் பதியுதீன், கட்டாயம் வழங்க கடமைப்பட்டுள்ளோம். அவருடன் தான் நாம் இருக்கிறோம். அவரது பெயரினை முன்மொழிவது குறித்து வினவப்பட்ட போது, மக்களின் நிலைப்பாடு எவ்வாறு இருப்பினும் பாராளுமன்றில் 113 அல்லது பெரும்பான்மையினை பெரும் நபரே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

அதற்கு நாம் வாக்குகளை சேர்க்க வேண்டும். அதற்கு கட்சிகளுடன் கலந்துரையாடி வருகிறோம் எனத் தெரிவித்திருந்தார்.