தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம், இம்மாதம் 90 மில்லியன் ரூபா வருமானத்தை ஈடுபட்டியுள்ளது.

தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நுழைவுசீட்டு விற்பனை மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வசதிகளின் ஊடாக இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடம் பொது மக்களுக்காக திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, முதல் மாதத்திற்குள் சுமார் ஒரு இலட்சத்து 65 ஆயிரம் பேர் தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர்.

தாமரை கோபுரம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. கடந்த நான்கு வாரங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோபுரத்தை பார்வையிட்டதாக ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கூறினார்.

தாமரை கோபுரம் வார நாட்களில் நண்பகல் 10 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.