பாகிஸ்தானில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தல்களும் வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் சமா தொலைக்காட்சியின் புலனாய்வுப் பிரிவினர் பாலியல் வன்கொடுமை குறித்து ஆய்வை மேற்கொண்டனர்.
முடிவில், பாகிஸ்தானில் கடந்த 2017 ஆம் ஆண்டு 3,327 பெண்களும் 2018 இல் 4,456 பேரும் 2019 இல் 4,573 பெண்களும் 2020 ஆம் ஆண்டு 4,478 மற்றும் 2021 இல் 5,169 பெண்கள் என கடந்த 4 ஆண்டுகளில் 21,900 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதாவது, ஒரு நாளுக்கு சராசரியாக 12 பெண்கள் என ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்.2022-ல் மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 4 மாதங்களில் மட்டும் இதுவரை 305 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். அதேநேரம் குடும்பம் மற்றும் தன்மானத்திற்கு பயந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி புகாரளிக்காமல் இருக்கும் பெண்களும் அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், கடந்த 4 ஆண்டுகளில் பாகிஸ்தானில் 1,957 ஆணவக் கொலைகளும் நடந்துள்ளன.
இந்தாண்டு பாகிஸ்தானின் 44 நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பாக 1,301 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. காவல்துறையினர் 2,856 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், 4 சதவீத வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு வந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.
2020-ல் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட 75 நாடுகளில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.