” எங்களுடன் இணைந்து போட்டியிட்டதால்தான் கடந்த பொதுத்தேர்தலில் ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார், எனவே, கூட்டணியில் இருந்து அவர் வெளியேறினால்கூட எமக்கு பாதிப்பு இல்லை. அது அவருக்கே சிக்கலாக அமையும்.”

இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், தனக்கு நெருக்கமான சிலரிடம் கருத்து வெளியிட்டுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், பங்கேற்றமை குறித்து மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தனக்கு நெருக்கமானவர்களிடம் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

தங்களுடன் கலந்துரையாடாமல் திகாம்பரம், தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார் எனவும் ராதா குற்றஞ்சாட்டியிருந்தார் என அறிவிப்புகள் வெளியாகின.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே திகாம்பரம், மேற்கண்டவாறு – தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார் என தெரியவருகின்றது.