வட மாகாணத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் சரணாலயம் ஒன்றை அமைப்பதற்கு பொருத்தமான நிலத்தை தேர்ந்தெடுக்குமாறு விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது வடக்கு மாகாணத்திற்கு என தனியான சபாரி சரணாலயம் அமைக்கப்படவில்லை. பெரும்பாலான சரணாலயங்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் நாட்டின் பிற பகுதிகளிலேயே அமைந்துள்ளன. எனவே வடமாகாணத்தின் 05 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தெற்கில் உள்ள மிருகக்காட்சிசாலைகளைப் பார்வையிட வரவேண்டும்.

இந்த குறை தீர்க்கப்பட வேண்டும். இதற்காக வடமாகாணத்தில் அமைக்கப்படவுள்ள புதிய சஃபாரி சரணாலயத்திற்கு பொருத்தமான காணியை ஆராயுமாறு அமைச்சின் செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் வனவள திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அமைச்சர் அமரவீர உத்தரவிட்டுள்ளார்.

தேசிய மிருகக்காட்சிசாலைகளில் உள்ள சில வகை விலங்குகள் மற்றும் மக்களின் தோட்டங்களுக்கு தீங்கு விளைவிக்கும் உயிரினங்களை இந்த பூங்காவிற்கு அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, யால தேசிய பூங்காவிற்குள் தனியார் வாகனங்களை தற்காலிகமாக அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் அமைச்சர் அமரவீர வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.