ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக ரசிகர்களை மிரள வைக்கும் அளவுக்கு வெளிவந்த திரைப்படம் தான் அவதார். அன்றைய காலகட்டத்தில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் வெளிவந்த அந்த திரைப்படம் பல்வேறு சாதனைகள் புரிந்தது. அது மட்டுமல்லாமல் பல விருதுகளையும் தட்டிச் சென்றது.

அதைத்தொடர்ந்து அந்த திரைப்படத்தை 5 பாகங்களாக எடுக்கப் போவதாக ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் அதன் அடுத்த பாகத்துக்காக ஆவலுடன் காத்திருந்தனர். அந்த வகையில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.

கடந்த வருடமே வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் கொரோனா தாக்கத்தின் காரணத்தால் இந்த வருடம் வெளியாக இருக்கிறது. இப்போதைய காலகட்டத்தில் பல டெக்னாலஜிகள் இருந்தாலும் நம் கற்பனைக்கு எட்டாத விஷயங்களை கண் கவரும் வகையில் கொடுக்கும் இந்த அவதார் சினிமா ரசிகர்களுக்கு எப்பவுமே ஸ்பெஷலாக தான் இருக்கிறது.

அதனாலேயே தற்போது இந்த இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லரை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தற்போது வெளியாகி இருக்கும் ட்ரெய்லர் ரசிகர்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கிறது.

கண் கவரும் அற்புதமான காட்சிகளும், நம்மால் யோசித்துக் கூட பார்க்க முடியாத விஷுவல் எபெக்ட்டுகளும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. அதிலும் கடலுக்குள்ளே இருக்கும் விதவிதமான மீன்கள், வித்தியாசமான பறவைகள் என்று இந்த அவதார் நிச்சயம் நம்மை வேறொரு உலகத்திற்கு கூட்டிச்செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

அந்த வகையில் வரும் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்த இருக்கிறது. இத்தனை வருடங்களாக இந்த இரண்டாம் பாகத்திற்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இன்னும் டிசம்பர் வரை எப்படி காத்திருக்க போகிறோம் என்று ஆர்ப்பரித்து வருகின்றனர்.