நாட்டை சீரழித்த அரச தலைவர்கள் உட்பட அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து முழுமையாக விலகும் வரை மக்கள் போராட்டம் தொடரும். யார் தேசதுரோகி,யார் தேசபிமானி என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக புதன்கிழமை இடம்பெற்ற போராட்டத்தை களனியில் ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை கொண்டு மக்கள் போராட்டத்தை கணிப்பிட முடியாது.மக்கள் போராட்டம் சற்று தணிவடைந்துள்ளதே தவிர முடிவடையவில்லை என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாட்டை சீரழித்த அரச தலைவர்கள் உட்பட அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து முழுமையாக விலகும் வரை மக்கள் போராட்டம் தொடரும்.

யுத்ததத்தின் போது ஒரு கட்டத்தில் போராட்டம் தீவிரமடையும்,ஒரு கட்டத்தில் போராட்டம் தளர்வடையும் அதற்காக போராட்டம் முடிவடைந்து விட்டது என குறிப்பிட முடியாது.அதுபோல தான் தற்போதும் மக்கள் போராட்டம் காணப்படுகிறது.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக கட்சியையும்,அடிப்படை கொள்கைகளையும் அடிக்கடி மாற்றிக் கொள்பவர்கள் போராட்டத்தில் ஈடுப்படுபவர்களை தேசதுரோகிகள் என்று குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது.யார் தேசதுரோகி,யார் தேசபிமானி என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

போராட்டத்தில் ஈடுப்படும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படுமாயின் மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து தேர்தலை நடத்த வேண்டும்.தேர்தல் ஒன்று இடம்பெற்றால் நாட்டு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றார்.