துபாய் மாகாணத்தில் அமைந்துள்ள புர்ஜ் கலிபாவுக்கு அருகே 35 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் திங்கள்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தின் அருகாமையில் உள்ள இந்த 35 மாடி கட்டிடம் நெருப்பு கோபுரமாக காட்சியளித்த சம்பவம் சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கட்டிடத்தின் வெளிப்புற முகப்பில் கருப்பு கரி அடையாளங்களால் மூடப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி சுமார் 2.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த 35 மாடி கட்டிடத்தில், இரண்டு குடியிருப்புகளில் தீயின் பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்றே கூறுகின்றனர்.

அதிகாலை 3.45 மணியளவில் நெருப்பு மொத்தமாக கட்டுக்குள் வந்ததாக தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்தை அடுத்து, அப்பகுதி முழுவதும் பொலிஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாகவும், அந்த குடியிருப்பில் தங்கியிருந்த மக்கள் அருகாமையில் உள்ள ஹொட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கீழ் தளத்தில் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் மளமளவென பரவிய தீ அந்த கட்டிடம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்னர் தான் குறித்த குடியிருப்பில் குடியேறிய பெண் ஒருவர், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பியதாக தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் காயம் பட்டவர்கள் அல்லது மரணமடைந்தவர்கள் தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.