பிரதமர் மோடி நாளை(வெள்ளிக்கிழமை) பெங்களூருவுக்கு வருகை தருவதையொட்டி முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்று சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்லும்படி போலீசார் அறிவுறத்தி உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக நாளை(வெள்ளிக்கிழமை) பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார்.

பிரதமர் வருகையையொட்டி பெங்களூருவில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடையும், போக்குவரத்திலும் மாற்றம் செய்து போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, நாளை காலை 8 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை முக்கிய சாலைகளில வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சி.ஓ.டி. ஜங்ஷன், போலீஸ் திம்மய்யா ஜங்ஷன், ராஜ்பவன் ரோடு, பசவேசுவரா சர்க்கிள், ரேஸ் கோர்ஸ் ரோடு, பேலஸ் ரோடு, சாங்கி ரோடு, பல்லாரி ரோடு, குயின்ஸ் ரோடு, ஏர்போர்ட் எலிவேட்டர் காரிடார் ரோடு, சேஷாத்திரிபுரம் ரோடு, கே.ஜி.ரோடு, வாட்டாள் நாகராஜ் ரோட்டில் கோடே சர்க்கிளில் இருந்து பி.எப். வரையிலும், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகன ஓட்டிகள் மாற்று சாலைகளில் செல்லவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. பிரதமர் வருகையையொட்டி பெங்களூரு சர்வதேச விமான நிலையம், பெங்களூரு சங்கொள்ளி ராயண்ணா(சிட்டி) ரெயில் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.