சன்னி லியோன் நடித்துள்ள ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை காமெடி நடிகர் சதீஷ் தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் படத்தில் நடித்த தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது சர்ச்சைக்குரிய விஷயத்தை பேசி தற்போது சதீஷ் வசமாக சிக்கிக் கொண்டார். அதாவது கவர்ச்சி நடிகையாக பார்க்கப்பட்ட சன்னி லியோன் புடவையில் வந்திருந்தார். இதனால் மேடையில் பேசிய சதீஷ், மும்பையில் இருந்து வந்திருந்த சன்னி லியோன் எப்படி புடவையில் வந்திருக்கிறார், கோயமுத்தூரில் இருந்து வந்த தர்ஷா குப்தா எப்படி உடை அணிந்திருக்கிறார் என விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக மூடர்கூடம் படத்தின் இயக்குனரான நவீன், பெண்கள் எந்த உடையை அணிய வேண்டும் என்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை, சதீஷ் உங்களின் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை கூட நீங்கள் முடிவு செய்தால் அதுவே தவறு தான் என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த சதீஷ், ‘தர்ஷா குப்தா அப்படி சொல்ல சொன்னதால்தான் நான் மேடையில் அப்படி பேசினேன்’ என்று நீண்ட விளக்கம் அளித்தார். இதைப் பார்த்ததும் தர்ஷா குப்தா மேடையில் என்ன நடந்தது என்பதை உடைத்து பேசி இருக்கிறார்.

நிச்சயம் நான் அப்படி சதீஷை பேச சொல்லவில்லை. யாராவது தன்னைத் தானே அசிங்கப்படுத்திக் கொள்ள சொல்வார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சதீஷ் தன்னை மேடையில் வைத்து அசிங்கப்படுத்தியதால் மிகவும் வலித்தது என்றும் கூறியுள்ளார். இதன்பின் பாடகி சின்மயி, தர்ஷா குப்தாவிற்கு ஆதரவாக ட்வீட் செய்திருக்கிறார்.

சதிஷை மன்னிக்க வேண்டும் என்றால் அது தர்ஷா குப்தா தான். மேலும் பொது இடங்களில் இது போன்ற அவலம் பெண்களுக்கு அடிக்கடி நடக்கிறது. ஆகையால் நகைச்சுவைக்காக யாரையும் தரம் தாழ்த்தி பேசக்கூடாது என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சன்னி லியோன் கலந்து கொண்ட நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தும் என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் வாய் சும்மா இல்லாமல் சதீஷ் மேடையில் கண்டபடி பேசி தற்போது சோசியல் மீடியாவில் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொள்கிறார்.