டயகம கிழக்கு 3 ஆம் பிரிவு தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பலியான, மூன்று பிள்ளைகளின் தந்தையான இராமகிருஸ்ணனுக்கு , இதொகாவால் தொழிற்சங்க நடவடிக்கைமூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள இழப்பீடு வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் கல்வியை முன்னெடுக்க, ஒரு பிள்ளைக்கு தலா 10 லட்சம் ரூபா படி 30 லட்சம் ரூபா இலங்கை வங்கி கிளையில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

தோட்ட தொழிலாளியான இராமகிருஸ்ணனுக்கு அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிர்வாகம் நட்டயீடாக 50 இலட்சம் ரூபாவும், வாழ்க்கையை முன்னெடுத்து செல்ல காணியும் வழங்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் தொழில் திணைக்களத்தில் இடம் பெற்ற பேச்சின்போது கோரிக்கை முன்வைத்தார்.

அதேநேரத்தில் மின்சாரம் தாக்கி பலியான இராமகிருஸ்ணனின் பிள்ளைகளின் கல்வி செலவை முழுமையாக தோட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு சுயத்தொழிலை மேற்கொள்ள காணியும் வழங்குதல் வேண்டும் என பல நிபந்தனைகளை காங்கிரஸ் சார்பில் முன்வைத்திருந்தது.

இந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் உயிரிழந்த தொழிலாளி இராமகிருஸ்னனின் குடும்பத்திற்கு 50 இலட்சம் நிவாரண நட்டயீடு வழங்க தோட்ட கம்பனி இணக்கம் தெரிவித்ததுடன் வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்ல காணியும் வழங்குவதாக இணங்கியது.

அதனடிப்படையில் டயகம கிழக்கு 3ம் பிரிவு தோட்டத்தில் பணிபுரிந்த அமரர் ராமகிருஷ்ணனின் துரதிஷ்டவசமான மறைவுக்குப் பின்னர் அவரது மூன்று பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிர்வாகம் தலா ஒரு பிள்ளைக்கு 10 லட்சம் ரூபாய் அடிப்படையில் 30 லட்சம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு வைப்பில் இட்டுள்ளது.

எஞ்சிய 20 லட்சம் ரூபாவில் இக்குடும்பத்திற்கு வீடு ஒன்றை தோட்ட நிர்வாகம் அமைத்து கொடுக்க இணங்கியுள்ளதுடன்,
அதற்கு தேவையான காணியை வழங்குவதற்கும் அக்கரபத்தனை பெருந்தோட்டயாக்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இ.தொ.கா உயர்பீடம் தெரிவித்துள்ளது.