கம்போடிய இனப்படுகொலையை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். ஆசியான் உச்சி மாநாட்டிற்காக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கம்போடியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்றைய தினம் புனோம் பென்னில் உள்ள Tuol Sleng Genocide அருங்காட்சியகத்திற்கு சென்ற ட்ரூடோ, அங்கு இனப்படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களைப் பார்வையிட்டார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‘கம்போடிய இனப்படுகொலையை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது, மேலும் இதுபோன்ற அட்டூழியங்கள் மீண்டும் நடக்க அனுமதிக்கக்கூடாது’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர், இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தவும், அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான கனடாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தவும் Tuol Sleng Genocide அருங்காட்சியகத்திற்கு சென்றதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டார்.

முன்னதாக, கம்போடியா மற்றும் உலகெங்கிலும் கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சிகளை ஆதரிப்பதற்காக, எந்த அளவிற்கு செயல்படுகிறோம் என்பது குறித்து விவாதித்ததாக ட்ரூடோ தெரிவித்தார்.