Myositis நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தாவுக்கு தற்போது ஆயுர்வேத சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார் சமந்தா. பல ஹிட் படங்களை கொடுத்துள்ள சமந்தா, தற்போது கதாநாயகியை மையமாக கொண்ட கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் உருவான யசோதா படம் தமிழ், தெலுங்கில் வெளியானது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலானது, Myositis நோயால் பாதிக்கப்பட்டிருந்த போது கூட கையில் டிரிப்ஸ்டன் யசோதா படம் தொடர்பான பணியில் அவர் ஈடுபட்டிருந்தது அதிர்ச்சியை கொடுத்தது.

அதன்பின்னர் நேர்காணல் ஒன்றில் பேசிய சமந்தா, சில நாட்கள் மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும், படுக்கையை விட்டுகூட எழ முடியாத நிலையில் கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஆனாலும் நான் சாகவில்லை, நோயுடன் போராடிக்கொண்டிருக்கிறேன், விரைவில் மீண்டு வருவேன் எனவும் கண்ணீர் மல்க நம்பிக்கையுடன் பேசினார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமந்தாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இது வெறும் வதந்தியே என சமந்தா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே வீட்டில் ஓய்வெடுத்து வரும் சமந்தாவுக்கு ஆயுர்வேத முறைப்படி சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் இதனால் சமந்தாவின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.