வடகொரியாவில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மாணவர்கள் இருவரும் தென் கொரியா மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி நாடகங்களை கண்டுகளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வடகொரியாவில் தொடர்புடைய நாடகங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அந்த மாணவர்கள் இருவருக்கும் 16 மற்றும் 17 வயது எனவும், இருவரும் கடந்த அக்டோபர் மாதம் பாடசாலையில் வைத்து தொடர்புடைய நாடகங்களை பார்த்துள்ளனர். இந்த நிலையில் திரளான பொதுமக்கள் முன்னிலையில் அந்த இரு மாணவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த அக்டோபர் மாதத்திலேயே இருவரும் கைது செய்யப்பட்டு, விசாரணையும் முடித்து, மரண தண்டனையும் நிறைவேற்றியுள்ளனர். ஆனால், இந்த தகவல் கடந்த வாரத்தில் தான் வெளியே கசிந்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் இருவரும் மேற்கொண்டது மிக கொடூரமான குற்றம் எனவும், பொதுமக்களை திரட்டி, அவர்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தந்தையின் நினைவு ஆண்டை முன்னிட்டு 11 நாட்கள் துக்கமனுசரிக்கப்பட்டது. இந்த துக்கமனுசரிப்பு நாட்களில் பொதுமக்கள் சத்தமாக சிரிக்கவோ, மது அருந்தவோ, வணிக வளாகங்களுக்கு செல்லவோ தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும், தென் கொரிய தொலைக்காட்சி நாடகங்களுக்கு 2020ல் இருந்தே வடகொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருட்டுத்தனமாக குறித்த நாடகங்களை பார்வையிடும் மக்கள் தண்டிக்கப்பட்டும் வந்துள்ளனர்.