சேறு பூசல்களினால் என்னை வீழ்த்த முடியாது. எனது பயணத்தை நான் தொடர்வேன்.” என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (ஜன.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்கு கொண்டு வரும் திட்டங்களை முன்வைக்கும் போது ஒரு சில அரச அதிகாரிகள் அரசியல் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி, அந்த திட்டங்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள்.

வங்குரோத்து நிலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் வெளிநாட்டு முதலீடுகள் தடைப்பட்டுள்ளன. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரச தரப்பினர் அரசியல் நோக்கங்களை ஒரு புறம் வைத்து விட்டு நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நாடு என்பதொன்று மிகுதியாக இருந்தால் தான் அனைவரும் அரசியல் செய்ய வேண்டும்.

தேர்தல் நடத்தும் நிலையில் நாட்டின் நிதி நிலைமை இல்லை. நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் அதன் தாக்கத்தையும் நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் தேர்தலை கோரவில்லை. எதிர்தரப்பினர் மாத்திரம் தேர்தலை கோருகிறார்கள்.

தூர நோக்கமற்ற கொள்கை இல்லாத காரணத்தினால் மின்சாரம்,சுகாதாரம், வலுத்துறை ஆகிய துறைகளில் பல பிரச்சினைகளை தற்போது எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மின்சாரம், நீர், எரிபொருள் உள்ளிட்ட சேவைகளின் நெருக்கடிகளை எதிர்கொள்ள எந்நிலையிலும் தயாராக இருக்க வேண்டும்.

வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கஞ்சா பயிர்செய்கைளை சட்டபூர்வமாக்குமாறு நான் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஒரு சில அரச அதிகாரிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள். ஒருசில அரச அதிகாரிகள் தான் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளார்கள். சேறு பூசல்களினால் என்னை வீழ்த்த முடியாது. எனது பயணத்தை நான் தொடர்வேன்.

வீதி கடைகளில் விற்பதற்காகவும்,அனைவரும் வாங்கி பயன்படுத்துவதற்காகவும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குமாறு கோரவில்லை, வர்த்தக பயிராக அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினேன். கஞ்சாவை பயன்படுத்துபவர்கள் பயன்படுத்துவார்கள், பயன்படுத்தாதவர்கள் பயன்படுத்த மாட்டார்கள்.நாட்டு மக்கள் அனைவரும் சிகரெட் பாவிக்கவில்லை, அதுபோல் தான் இதுவும்.

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்காத தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம்.இதனூடாக பல உற்பத்திகளை உருவாக்கலாம்.இலங்கை மக்களின் வாழ்க்கையுடன் கஞ்சா தொடர்புப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில் இலங்கையர்கள் கஞ்சாவை உணவாக உட்கொண்டதுடன், புகைத்தலுக்கா பயன்படுத்தியுள்ளார்கள். தவறான சிந்தனைகள் மற்றும் முட்டாள்தனமான கருத்துக்களில் இருந்து வெளிவரும் வரை இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்றார்.