வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் வீதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தாண்டிக்குளத்திலிருந்து புதுக்குளம் செல்லும் பிரதான வீதியில் தாண்டிக்குளம் சந்தியிலிருந்து 500 மீற்றர் தொலைவிலுள்ள வளைவுக்கு அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் சடலம் ஒன்று காணப்படுகின்றது எனப் பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

குறித்த மரணத்துக்குக் காரணம் விபத்தாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படும் நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா – ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மிகிந்தலை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பொலிஸ் சார்ஐன் வசந்த சந்தன நாயக்க என்பரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.