இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தரை தெரிவு செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் 7 பேராசிரியர்கள் மற்றும் 4 கலாநிதிகள் உள்ளிட்ட 11 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

புதிய உபவேந்தரை தெரிவு செய்வதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவினர், குறித்த 11 பேரில் இருந்து இதே பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரம் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எம்.றஸ்மி, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன், பேராசிரியர் பாத்திமா ஹன்ஸியா அப்துல் ரவூப், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அஸ்லம் உள்ளிட்ட ஐவரையும் புள்ளிகள் அடிப்படையில் தெரிவு செய்திருந்தனர்.

இதேவேளை இன்று மாலை கூடிய பேரவை, தெரிவுக்குழுவினால் பிரேரிக்கப்பட்ட ஐவரில் இருந்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட முன்னாள் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எம்.றஸ்மி, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன், கலை, கலாசாரம் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் ஆகிய மூவரை உபவேந்தர் நியமனத்துக்காக ஜனாதிபதிக்கு சிபார்சு செய்துள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவதாக உபவேந்தர் கதிரையில் அமர முன்னாள் உபவேந்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், இதே பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரம் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் பாத்திமா ஹன்ஸியா அப்துல் ரவூப், பேராசிரியர் ஏ.எல். அப்துர் ரவூப், பொறியியல் பீடத்தின் இயந்திரவியல் பேராசிரியர் ஏ.எம். முஸாதீக், முகாமைத்துவ பீடத்திலிருந்து பேராசிரியர் எம்.பீ.எம். இஸ்மாயில் போன்றோருடன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அஸ்லம், கொழும்பு பல்கலைக்கழக நிதிப் போராசிரியர் ஏ.ஏ.அஸீஸ், மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன், பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எம்.றஸ்மி அத்துடன் மலேசியவிலுள்ள மலாயா பல்கலைக்கத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இஸ்மத் றம்ஸி ஆகியோரும் விண்ணப்பிருந்தனர். அதேவேளை பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீமின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

– நூருள் ஹுதா உமர் –