இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணி 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் சரித் அசலன்க 2 பவுண்டரிகள் அடங்களாக 47 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் தென் ஆபிரிக்க அணியின் கேஷவ் மஹராஜ் 38 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 204 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 30 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

அணி சார்பில், ஹென்ரிச் கிளாசென் 3 பவுண்டரிகள் அடங்களாக 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் மஹீஸ் தீக்ஸன 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதன்படி, தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை, இலங்கை அணி 2 – 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.