தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் நாட்டில் மீண்டும் ஒரு இனவாத பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்களா என்ற சாதாரண சந்தேகம் எழுந்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு மிகவும் உறுதுணையாக அமைந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இவ்வாறான தாக்குதல்களை நடத்தினார்கள் என்பது தொடர்பான சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) ஆண்டகை அது தொடர்பில் குரல் எழுப்பி வருவதாக அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க பாதிரியார்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ள அனுரகுமார திசாநாயக்க, சிறிது காலம் தலைமறைவாக இருந்த இனவாத கருத்துக்களை பரப்பும் நபர்கள் தற்போது திடீரென மீண்டும் தோன்றி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முறையாக ஆட்சி செய்ய முடியாமல் தோல்வி அடைந்தவர்கள் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஏதேனும் ரத்த வெள்ளத்தில் நாட்டை தள்ளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே இந்த விடயம் குறித்து நாட்டு மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.