“ மாற்று அரசொன்றை உருவாக்கினால்கூட தற்போதைய சூழ்நிலையில் அந்த அரசும் 6 மாதங்களுக்குள் கவிழ்ந்துவிடும். எனவே, மாற்று அரசு அல்ல, உறுதியான வேலைத்திட்டமே தற்போது வேண்டும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாடு தற்போது பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. மக்கள் மத்தியில் அரசுக்கான செல்வாக்கும் குறைவடைந்துள்ளது. மக்களால் அரசுமீது சரமாரியாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எல்லாப் பிரச்சினைகளும் கொரோனாவால் ஏற்பட்டவையும் அல்ல. உரப்பிரச்சினையை தாமாக இழுந்துக்கொண்டது அரசு. இதனால் நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடையும். இந்தியாவில் இருந்துவரும் அரிசியைதான் உண்ணவேண்டிவரும். அப்போது இரசாயன உரப்பிரச்சினை வராதா?

கேஸ் பிரச்சினையும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்கு பொறுப்புக்கூறவேண்டியவர்களுக்கு தண்டனையை மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். அதனை ஜனாதிபதி பெற்றுக்கொடுக்க வேண்டும். அதனால்தான் 20 ஊடாக ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

தவறான ஒரு சில தீர்மானங்களால் ஒட்டுமொத்த அரசும் சீர்குலைந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மாற்று அரசொன்றை ஏற்படுத்தினால்கூட மாற்றம் வரப்போவதில்லை. அவ்வாறு உருவாகினால்கூட அந்த அரசும் ஆறு மாதங்களுக்குள் வீழ்ந்துவிடும்.” -என்றார்.