சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தரவுள்ளார்.

சீனாவுக்கும், இலங்கைக்கும் இருதரப்பு இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65ஆண்டுகளாகின்றன.

அதனை முன்னிட்டு ஏற்பாடாகியுள்ள நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே அவர் வருகை தருகின்றார் என இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்திருக்கின்றது.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இலங்கைக்கு வருவது இது முதற்தடவை அல்ல. இதற்கு முன்னரும் வருகை தந்திருக்கின்றார். சந்திப்புக்களை நடத்தியிருக்கின்றார்.

குறிப்பாக, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்றாவது தடவையாக இப்போது வருகின்றார்.

இதற்கு முன்னதாக, 2020 ஜனவரியில் வருகை தந்திருந்தார். பின்னர் கடந்த ஆண்டு ஜுனில் வருகை தந்திருந்தார். இப்போது ஆண்டின் முதல் மாதத்திலேயே வருகை தருகின்றார்.

இதற்கிடையில் சீனாவின்  கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினரான யாங் யீச்சியும், 2020இல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பின்னர், சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் 2021 மே மாதம், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயங்கள் அனைத்துமே சீன, இலங்கை இருதரப்பு உறவுகள் என்பதற்கு அப்பால் சீனாவின் நலன்களை மையப்படுத்தியவை என்பது தான் மிகவும் முக்கியமான விடயமாகும்.

ஏற்கனவே, சீனா இலங்கையில் ஆழமாக கால்பதித்துள்ள நிலையில் அண்மையில் ஏற்பட்ட ‘சீன உரம்’ குறித்த முரண்பாடுகளால் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் விரசல்கள் இல்லாமலில்லை.

இந்த நிலையில் தான் இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் ஆண்டு நிறைவொன்றை கொண்டாடுவதற்கு சீனாவின் வெளிவிவகார அமைச்சரே நேரில் வருகின்றார்.

இதுவெறுமனே கொண்டாட்டத்திற்கான வருகை அல்ல. அதனையும் தாண்டி சில விடயங்கள் உள்ளன. குறிப்பாக, இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் அண்மையில் வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இதில், அவர் மன்னார் ஊடாக இராமர் அணையை அண்மித்துள்ள மணற்திட்டு வரையில் சென்றமை முக்கிய விடயமாக பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பருத்தித்துறைக்குச் சென்றார். கௌதாரி முனைக்குச் சென்றார். அதற்கான காரணங்கள் வெளியாகவில்லை.

உண்மையிலேயே, சீனா வடக்கில் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம் மற்றும் நகரை அபிவிருத்தி செய்தல், கௌதாரிமுனையில் காற்றாலை மின்சக்தி திட்டங்களில் முதலீடு செய்தல் ஆகியவற்றில் கரிசனை கொண்டிருக்கின்றது. அதற்கான சமிக்ஞைகளையும் வெளிப்படுத்தியுள்ளது.

இதேவேளை,  கொழும்பிலும் யுகதநவி மின்திட்டம் குறித்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டமைக்கு எதிராக ஆளும் தரப்பின் மூன்று அமைச்சர்கள் உயர் நீதிமன்றம் சென்றுள்ளனர்.

நீதிமன்றம் அந்த உடன்பாட்டை சவாலுக்கு உட்படுத்தி அமெரிக்கா உடன்படிக்கையை கைவிட்டால் அதனைப் பெற்றுக்கொள்வதில் சீனா ஆர்வத்துடன் இருக்கின்றது.

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதுவர் பாலித கொஹன்ன, யுகதநவி மின்திட்டத்தில் சீனா ஆர்வமாக இருக்கின்றது என்ற விடயத்தினை பகிரங்கமாகவே தெரிவித்திருக்கின்றார்.

ஆகவே, சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயம் வெறுமனே இராஜதந்திர ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் என்பதற்கு அப்பால் இலங்கையில் மேலும் அழுத்தமாக தமது கால்களை பதிப்பதாகும்.

குறிப்பாக வடக்கில் தமது கால்களை அகலமாக வைத்துக்கொள்வதாகும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகின்றது.

எவ்வாறாயினும், சீன வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு முன்னதாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷ கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் 45 விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றார். குறிப்பாக, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமே 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் அதிக வட்டி விகிதத்தில் இருந்து சீனாவுக்கு பலனளித்த ஒரேயொரு திட்டம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

நுரைச்சோலை மின் உற்பத்தி திட்டத்தை விட ஏனைய திட்டங்கள் அனைத்தும் வெறும் வீண்செலவுகள் எனவும், சீனா இலங்கையை பாரிய கடன் வலையில் சிக்க வைத்துள்ளதாகவும் அவர் நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஜனநாயக முறைமையின் கீழ் நீக்கப்படும் என்றும் இதன்போது கடந்த 15 வருட காலத்தில் சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் மீண்டும் ஆராயப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நடைபெறும் தேர்தல்கள் மக்களின் கருத்துக்கணிப்புடனேயே நடைபெறும் என்றும் இதன் போது ஊழல் மோசடிகள் காணப்படும் அனைத்து உடன்படிக்கைகளும் இரத்துச் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு  சீனாவுக்கும் இடையிலான நட்புறவு இனி நேர்மையானதும் உண்மையானதுமாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் செலன்திவா நிறுவனம் ஊடாக ஏதேனுமொரு சொத்தை கையகப்படுத்தினாலும் அது ஆரம்பத்திலிருந்தே இரத்தாகும் என்பதனை நினைவிற்கொள்ளுமாறு குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக, சீனா, ஆழமாக கால்பதிக்க விரும்பினாலும், அதற்கு தற்போது தென்னிலங்கை அரசியல் தரப்பிலிருந்தே பகிரங்கமாக எதிர்ப்பலைகள் வெளிக்கிளம்ப ஆரம்பித்துள்ளன.

இந்தப் பின்னணியில் தற்போதைய அரசாங்கம் சீனாவின் கைகளை மேலும் இறுகப் பற்றுமானால், அது ‘கடன்பொறிக்குள்’ சிக்குவதையும், தென்னிலங்கை மக்களின் ‘எழுச்சிக்கு’ வித்திடுவதையும் தவிர்க்க முடியாது போகும்.

அவ்விதமான நிலைமையானது, அரசாங்கத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கைக்கும் ‘சிவப்பு’ சமிக்ஞை தான்.

-யே.பெனிற்லஸ்-