அரசாங்கத்திற்குள் சிங்கம் போல் இருந்த சிலர் நாய் குட்டிகளின் நிலைமைக்குச் சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

சுசில் பிரேமஜயந்தவின் வாயை அடைத்த பின்னர், அவர்கள் இந்த நிலமைக்கு சென்றுள்லதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

விமல் வீரவன்ச போன்றவர்கள், அரசாங்கத்தின் அனுமதியுடனேயே பேசுகின்றனர். அண்மையில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் காதருகே சென்று நான் ஏதாவது கூறினால் சிக்கலாகுமா என்று வீரவன்ச கேட்டதைப் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் சிங்கம் போல் இருந்த விமல் வீரவன்ச போன்றவர்கள் நாய் குட்டிகள் போல் மாறியுள்ளனர். நாட்டில் இனவாதம், தேசப்பற்று பற்றிப் பேசிய வீரவன்ச போன்றவர்கள் அமைச்சுப் பதவி பறிபோய் விடும் என்ற அச்சத்தில் நாய்குட்டி போல் மாறியுள்ளனர்.

அரசாங்கத்தின் கொள்கை, மோசடிகளைக் கூற முடியாது இவர்கள் தவிக்கும் போது அருவருப்பாக உள்ளது. அத்துடன் நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப் போவதில்லை என உதய கம்மன்பில கூறினார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை 50 வருடங் களுக்கு இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கும் தீர்மானத்துடன் அமைச்சர் உதய கம்மன்பிலவின் தேசப்பற்றாளர் என்ற ஆடை அவிழ்ந்து போயுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் எது எப்படி இருந்த போதிலும் டொலருக்காக அரசாங்கம் நாட்டின் வளங்களை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் சமிந்த விஜேசிறி இதன்போது  தெரிவித்தார்.