இந்த அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை காப்பாற்றியது மாபெரும் தவறான விடயம் என தெரிவித்துள்ள போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, அதன் காரணமாக தான் அரசாங்கத்துடன் பலர் கோபத்துடன் இருப்பதாகவும் எனவே இந்த விடயம் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களின் கருத்துகளால் அரசாங்கத்துக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படப் போவதில்லை.

கூறப்போனால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாமல் போகும் என தெரிவித்த அவர், அப்பம் சாப்பிட்டு தப்பியோடிய பிறகு, “நாம் புதிய கட்சியை உருவாக்கி மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று, முன்னாள் ஜனாதிபதி பிரதமராகி, அவரே தனது சகோதரரை ஜனாதிபதியாக்கியுள்ளார்” என குறிப்பிட்டார்.

“எனவே, எமக்கு மிகுதி வேலைகளைச் செய்வதற்கு எவரும் அவசியமில்லை. அவர்கள் இருப்பது தான் எமக்கு அழுத்தம். நாங்கள் ஒரேயொரு ஆசனத்தை மேலதிகமாக வைத்துக்கொண்டு, அரசாங்கத்தை நடத்தியுள்ளோம். மூன்றிலிரண்டு எனக் கூறிக்கொண்டு நாம் பொறுமையுடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், இறுதி நேரத்தில் அவர்கள் ஏமாற்றிச் செல்வர். அவ்வாறான 3, 4 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பிலும் வெகு விரைவில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.