ரஷ்யாவின் கிழக்கு எல்லையின் நாடுகளில் நேட்டோவின் படைகள், ஏவுகணைகள் இருப்பதால், அதன் பாதுகாப்பிற்காக உக்ரைன் நேட்டோவில் சேர்க்கக்படக்கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கை நியமானது என்றும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ரஷ்யாவின் கிழக்கு நோக்கி விரிவடைந்து வருவதே உக்ரைன் – ரஷ்யா போருக்குக் காரணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்)அறிக்கை வெளியிட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை ‘துரதிர்ஷ்டவசமானது’ என்றும், அதே சமயம் ஆயுதப் போர்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அதே சமயம் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதில் இருந்து, ரஷ்யாவிற்கு வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு மாறாக, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படிப்படியாக ரஷ்யாவின் கிழக்கு நோக்கி விரிவடைந்து வருவதையும், உக்ரைனை நேட்டோவில் இணைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சி ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருந்திருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

“கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ரஷ்யாவின் எல்லைகளில் நேட்டோவின் படைகள் மற்றும் ஏவுகணைகள் இருப்பதால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக ரஷ்யாவும் அதன் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளது. ஆகவே உக்ரைன் நேட்டோவில் சேர்க்கக்பட கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கை நியமானது.

“உக்ரைனில் அமைதியை நிலைநாட்டப்பட வேண்டுமானால், கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதி உட்பட அனைத்து மக்களின் உண்மையான பிரச்சினைகள் கவனிக்கப்பட வேண்டும். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியக் குடிமக்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வதற்கான போதுமான நடவடிக்கை பாஜக அரசு எடுக்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட இதே நிலையைத்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சி.பி.ஐ) எடுத்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் எல்லையில் தற்போது நிலவும் பதட்டமான சூழ்நிலைக்குக் காரணம் அமெரிக்காதான். ரஷ்யாவைச் சுற்றி அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் விரிவாக்க நடவடிக்கைகளே ரஷ்யாவைப் போரில் இறங்கக் கட்டாயப்படுத்தியது என்று சி.பி.ஐ பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

நேட்டோவை ரஷ்யாவின் கிழக்குப் பகுதிகள் மற்றும் உலகின் மற்ற எந்தப் பகுதிக்கும் விரிவுபடுத்துவதற்கான அமெரிக்கவின் நடவடிக்கை என்றுமே உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று டி.ராஜா கூறியுள்ளார்.

ரஷ்யாவிற்கு எதிரான ஐ.நா., தீர்மானம் – வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

க்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.

அமெரிக்கா, அல்பேனியா முன்மொழிந்த தீர்மானத்தை 11 நாடுகள் அங்கீகரித்த நிலையில் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

தீர்மானத்தை ஆதரித்து ஆஸ்திரேலியா, எஸ்டோனியா, ஃபின்லாந்து, ஜார்ஜியா, ஜெர்மனி, இத்தாலி, லீசெஸ்டைன், லக்ஸம்பெர்க், நியூசிலாந்து, நோர்வே, போலந்து, ருமேனியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வாக்களித்துள்ளன.

15 நாடுகள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான ரஷ்யா, அதன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தைத் தோற்கடித்துள்ளது.

தீர்மானத்தின் மீது வாக்களிக்காதது குறித்து விளக்கமளித்துள்ள இந்திய பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, “பேச்சுவார்த்தைமூலம் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும். மனித உயிர்களை பறிப்பது என்பது எந்த வகையிலும் தீர்வைத் தராது. ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டது தவறு. அதற்காக வருந்துவதோடு, மீண்டும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்புமாறு அனைத்து தரப்பினரையும் வழியுறுத்துகிறோம்” என கூறியுள்ளார்.

மேலும், ”உக்ரைனில் நடந்து வரும் தாக்குதல்கள் பெருமளவில் கவலையளிக்கின்றன. வன்முறையை விடுத்து, வெறுப்பைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம். உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை குறிப்பாக மாணவர்களை மீட்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு, இந்த தீர்மானத்தில் வாக்கெடுப்பதை இந்தியா புறக்கணிக்கிறது.” என தெரிவித்துள்ளார்.