“ தமிழீழ விடுதலைப் புலிகள், நாட்டில் மீண்டும் தாக்குதலை நடத்தவுள்ளனர் என வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. அவை போலியானவை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ மக்கள் பாதுகாப்பு கருதியே முன்னர் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது அரசின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள அவசரகால சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

மே 09 ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பில் நாமும் கவலை அடைகின்றோம். ஆனால் அலரிமாளிகையில் இருந்துதான் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது என்பதை மறந்துவிடவேண்டாம். எனவே, ஏனைய கட்சிகள்மீது பழிசுமத்திவிரட்டு, தப்புவதற்கு ஆளுந்தரப்பு முற்படக்கூடாது. எமது கட்சி காரர்கள் தவறிழைத்தால்கூட தண்டனை வழங்கப்படவேண்டும்.

ஆனால் அலரிமாளிக்கையில் இருந்து வன்முறை தூண்டப்பட்டதால்தான் மக்கள் கொதிப்படைந்தனர் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றியும் கருத்து வெளியிடப்பட்டது. அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்களில் ஒருவர், உங்கள் உங்கள் அணியில் பிரதமராகவும் இருக்கிறார். இதற்கிடையில் புலிகள் தாக்குதல் நடத்தவுள்ளனர் எனவும் தகவல் பகிரப்பட்டுவருகின்றது. இதில் எவ்வித உண்மையும் கிடையாது.

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தை கைவிடக்கூடாது. தொடர்ந்து போராட வேண்டும். அது இந்நாட்டில் விடுதலைக்கு வழிவகுக்கும்.” – என்றார்.