அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சர்வக்கட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று (28) மாலை நடைபெற்றது. இதன்போதே இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அடிப்படைச் சட்டமூலத்திற்கு ஜுன் 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் சட்டவரைஞரால் இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணங்கியொழுகவில்லை என்பதை சட்டமா அதிபரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.