கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நாளை பாரிய எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த எதிர்ப்பு போராட்டம் நாளை மதியம் கொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னால் இடம்பெறவுள்ளது.

அனைத்து மக்களையும் அதில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இதேவேளை, இன்று அரச தலைவர் மாளிகைக்கு செல்லும் செத்தம் வீதியில் ஐக்கிய தேசிய சுயதொழில் வணிகர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் உள்ளிட்ட நான்கு பேரை கோட்டை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு வழங்க கோரியே ஐக்கிய தேசிய சுயதொழில் வணிகர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.