இஸ்லாமியர்களின் முக்கிய புனித தலங்களில் ஒன்றான மக்காவில் இனி தமிழிலும் அரஃபா நாள் சொற்பொழிவு ஒலிபரப்பப்படவுள்ளது.

இஸ்லாத்தின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா நாள் பிரசங்கத்தின் மொழிபெயர்ப்பு ஏற்கனவே 10 மொழிகளில் ஒலிபரப்பப்படுகிறது. இந்நிலையில், தமிழ் உட்பட 4 மொழிகளில் இனி சொற்பொழிவு மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்படும் என்று மக்கா- மதீனா புனித தலங்களின் பொது தலைமை தலைவர் அப்துல் ரஹ்மான அல்-சுதைஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாட்காட்டியின்படி 12ஆவது மாதமான துல்ஹஜ் 9ஆம் திகதி அரஃபா நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த நாளிலேயே இறுதித் தூதுவரான முஹமது நபிகள் அரஃபா மலையில் தனது இறுதிப் பிரசங்கத்தை நிகழ்த்தியிருந்தார் என்று நம்பப்படுகின்றது.

மக்காவில் உள்ள நிம்ரா மசூதியில் அரஃப தின உரை கடந்த 5 ஆண்டுகளாக அரபு அல்லாத உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது. ஆங்கிலம், பிரெஞ்சு, பாரசீகம், ஆபிரிக்க எனப் 10 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நிலையில் இப்போது தமிழும் உள்வாங்கப்பட்டுள்ளது.