ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய நிர்வாகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில், சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு தரப்புகள் தெரிவித்துள்ளன.

எனினும் உரிய திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நிதி அமைச்சகத்தின் உள்ளீடுகளைப் பயன்படுத்தி நிதி ஒதுக்கீடு சட்டம் 2022க்கான திருத்த வரவை சட்ட வரைவாளர் இப்போது உருவாக்குகிறார்.

தற்போதைய நெருக்கடி நிலை
தற்போதைய நெருக்கடியான உணவுப் பற்றாக்குறை மற்றும் வாழ்க்கைச் செலவுகளின் அடிப்படையில், நிதி அமைச்சு, முந்தைய மொத்த செலவின மதிப்பீடான 3.6 டிரில்லியன் ரூபாவில் இருந்து திருத்த வரைவில் மொத்த செலவின மதிப்பீட்டை 4.6 டிரில்லியன் ரூபாவாக மாற்றியுள்ளது.

அதன்படி, 2022இல் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் அனைத்து செலவுகள் மற்றும் வருவாய் மதிப்பீடுகள் மாற்றப்படும். வரி மூலமான வருவாய், வரி அல்லாத வருவாய், மாகாண சபைகளின் வருவாய் மற்றும் மானியங்கள் உட்பட மொத்த வருவாய் 2.06 டிரில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் 2019 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த வரிக் கட்டமைப்பு மீள அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான ஒதுக்கீடு 201 பில்லியன் ரூபாவில் இருந்து 270 பில்லியன்களாக அதிகரிக்கப்படுகிறது. சமுர்த்தி நிவாரணம் சுமார் 100 பில்லியனில் இருந்து 350 பில்லியன்களாக அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஹெக்டேருக்கு கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்