தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தீபாவளியன்று உருவாகும் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடல் பகுதியில் காற்றழுத் தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில்,தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை,திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும் என்றும் கணித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடற்பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறும் என்றும் 24 ஆம் தேதி புயலாக வலுவடைந்து மேற்கு வங்கத்தை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சிட்ரங் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது எனக் கணிக்கப்பட்டுள்ளது