நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் எதிர்வரும் 14 ஆம் திகதி அதிதிகளுக்கான சம்பிரதாயபூர்வ தேநீர் உபசாரம் இம்முறை நடைபெறமாட்டாது.

பாதீடு முன்வைக்கப்படும் நாளில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட விசேட அதிதிகளுக்காக வழமையாக சம்பிரதாயபூர்வமாக நடத்தப்படும் தேநீர் விருந்துபசாரத்தை இம்முறை நடத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையை கவனத்திற் கொண்டே ஜனாதிபதி இத்தகைய தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 14ஆம் திகதி செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார். பாதீடுமீது டிசம்பர் 8 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.