வெலிகடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தண்ணீர் தாங்கியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொரள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாளிகாவத்தையை சேர்ந்த 56 வயதான சாஹூல் ஹமீட் சபர்டீன் என்ற கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

போதைப் பொருள் சம்பந்தமான குற்றத்திற்காக ஒன்றரை மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்த கைதி சிறைச்சாலையில் எஃப் விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கடுமையாக போதைப் பொருளுக்கு அடிமையான இந்த கைதி, சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து உணவு சாப்பிடவில்லை என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த தினத்தில் இரவில் உறங்காது, கைதி தண்ணீர் தாங்கியில் அமர்ந்து இருந்ததை கண்ட வேறொரு கைதி ஒருவர், திரும்பி வரும் போது, அந்த கைதி தண்ணீர் தாங்கியில் விழுந்து கிடப்பதை கண்டு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரி கைதியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.