நடுக்கடலில் மீட்கப்பட்டு வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர்ந்தோர் நாடு திரும்ப மறுத்துவிட்டனர். ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு அப்பால் கடலில் மீன்பிடிக்கப்பல் சேதமடைந்து தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப மறுத்துவிட்டனர். மாறாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயத்திடம் (UNHCR) அவர்கள் வெளிநாட்டில் குடியேற உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நவம்பர் 07-ஆம் திகதி பிலிப்பைன்ஸுக்கும் வியட்நாமிற்கும் இடையிலான கடற்பரப்பில் சுமார் 303 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் குறித்த தகவல் கிடைத்தவுடன், இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை இலங்கை கடற்படைக்கு அறிவித்திருந்தது.

அந்தப் படகை தொடர்பு கொண்ட இலங்கை கடற்படையினர், படகை இயக்கிய குழுவினர் அதில் இருந்த பயணிகளுடன் படகை கைவிட்டுவிட்டதாகத் தெரிவித்தனர்.

பின்னர் வெளிவிவகார அமைச்சின் முயற்சியின் பேரில், இலங்கை கடற்படை மற்றும் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் வியட்நாமில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட பிராந்திய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்கள் (MRCC) இணைந்து மீட்புப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் எம்ஆர்சிசி மூலம் ஜப்பானியக் கொடியுடன் கூடிய Helios Leader என்ற கப்பலைத் தொடர்பு கொண்டு, கடலில் மூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து அனைவரையும் மீட்டனர். பின்னர், அவர்கள் அனைவரும் தெற்கு வியட்நாமில் உள்ள Vung Tau துறைமுகத்தில் வியட்நாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையடுத்து, நவம்பர் 09 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வியட்நாம் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Le Thi Thu Hang, வியட்நாமுக்கு அப்பால் கடலில் மீட்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது நிலையான நிலையில் இருப்பதாகவும் அவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அனைத்து இலங்கையர்களும் பா ரியா-வுங் தாவ் திறமையான படைகள் மற்றும் ஹோ சி மின் நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது Vung Tau நகரம் மற்றும் Dat Do மற்றும் Xuyen Moc மாவட்டங்களில் தங்கியுள்ளனர்.

அவர்களை பத்திரமாக மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு சொந்த நாட்டிற்கு திரும்பிச்செல்ல விருப்பமில்லை, பதிலாக வெளிநாட்டில் புலப்பெயரை உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.