பிரித்தானியாவின் சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட நான்கு அங்குலம் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து வாகன ஓட்டிகள் பெரும்பாலும் சாலையை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளனர். மேலும், நாட்டின் சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை மூன்று நாட்களுக்குள் பெய்யும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

மேலும், மிட்லாண்ட்ஸ் மற்றும் வடக்கு அத்துடன் கிழக்கு ஸ்காட்லாந்தின் பெரும்பகுதி முழுவதும் பலத்த மழைக்கான இரண்டு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சுற்றுசூழல் அமைப்பானது பிரித்தானியாவில் 24 வெள்ள அபாயங்களையும் 98 எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை லண்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள ரயில் சேவைகளில் கடுமையான இடையூறு ஏற்பட்டுள்ளது, எசெக்ஸில் இருந்து தலைநகருக்கு செல்லும் ரயில்கள், ரயில்வே கிராசிங் தடையில் லொறி ஒன்று மோதியதைத் தொடர்ந்து தாமதமாக வந்துள்ளன.

மேலும், நேற்றிரவு பெய்த கனமழையால், மேற்கு சசெக்ஸில் A27 இன் ஒரு பகுதி ஆறாக மாறியதால், வெள்ளத்தில் மூழ்கிய பாதையால் டசின் கணக்கான சாரதிகள் சிக்கித் தவித்துள்ளனர்.

மட்டுமின்றி, டோர்செட், ஹாம்ப்ஷயர், கிழக்கு மற்றும் மேற்கு சசெக்ஸ், கென்ட் மற்றும் சர்ரேயில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்,

எச்சரிக்கையின் கீழ் உள்ள பகுதிகளில் மக்கள் வெள்ளநீரின் ஊடாக பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையங்கள் வழியாக இயங்கும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படலாம், 40 நிமிடங்கள் வரை தாமதமாகலாம் அல்லது, மறு அறிவிப்பு வரும் வரை இடையூறு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.