ஒரே மாதத்தில் இரண்டாவது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பிரான்ஸ் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 12 வயது சிறுமி கொடூரமாகக் கொல்லப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, நாட்டின் தெற்கு பகுதியில் 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பிரான்ஸ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பிரான்ஸில் உள்ள Tonneins-ல் பள்ளியை விட்டு வெளியே வந்த வனேசா (Vanesa) என்ற 14 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக தனது காரில் ஏற்றிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக 31 வயது ஆடவரை பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

அவர் சிறுமியை கொலை செய்தபின், உடலை ஒரு கைவிடப்பட்ட வீட்டில் விட்டுவிட்டு சென்றதை பாதுகாப்பு கமெரா காட்சிகள் மூலம் பொலிஸார் விரைவாக அடையாளம் கண்டனர்.

இதையடுத்து, தெற்கு நகரமான மர்மாண்டேவில் உள்ள அவரது குடியிருப்பில் அந்த நபரை கைது செய்ய பொலிஸார் சென்றபோது, ​​​​”நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்று கூறி சரணடைந்துள்ளார்.

அதே நபர் 15 வயதாக இருந்தபோது, ​​2006-ஆம் ஆண்டில், மற்றொரு மைனரை பாலியல் ரீதியாக சீண்டியதற்காக, அந்த நபருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில வாரங்களுக்கு முன், பாரிஸில் லோலா என்ற 12 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டிற்கு வெளியே ஒரு சூட்கேஸில் அவரது உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் பிரான்சில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த வழக்கின் முக்கிய சந்தேகநபரான 24 வயதுடைய பெண் ஒருவர், கொலை, கற்பழிப்பு மற்றும் சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கடுமையான குடியேற்றக் கொள்கை தேவை லோலாவின் கொலை பிரான்சில் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியது, சந்தேக நபர் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர என தெரியவந்ததை அடுத்து, நாட்டில் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை கொண்டுவரவேண்டும் என எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தனர்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும், தீவிர வலதுசாரி எதிர்க்கட்சி, நீதித்துறை மற்றும் அரசியல் அதிகாரிகள் குற்றச்செயல்களில் மென்மையாக நடந்துகொள்வதாகவும், ஆபத்தான நபர்களை வீதிகளில் இருந்து விலக்கி வைப்பதற்கு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விமர்சித்துள்ளது.