அண்மைக்காலமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உயர்கல்வியினை சர்வதேச மயப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசியர் ஏ.றமீஸ் தலைமையில் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.றியாட் ரூளி இதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம் சர்வதேச ரீதியாகச் செயற்படுகின்ற பல்கலைக்கழகங்கள், கல்வி மற்றும் ஆய்வுசார்ந்த அமைப்புக்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளைக் கைச்சாத்திட்டு, அவற்றினை பயனுள்ளவகையில் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில், அண்மையில் இந்திய கல்விசார் ஆய்வு மன்றத்துடனான (Indian Academic Research Association) சந்திப்பும் உடன்படிக்கையும் கடந்த 27.09.2022ம் திகதி இணையவழியூடாக இடம்பெற்றது.

இதனைத்தொடர்ந்து, இன்றும் (24-11- 2022) KSR College of Arts & Science for Women in India நிருவனத்தினுடான சந்திப்பும் உடன்படிக்கையும் இணையவழியூடாக இடம்பெற்றது.

இவ்வுடன்படிக்கைக்கான ஆரம்பகட்ட முன்னெடுப்புக்களை தென்கிழக்குப் பல்கலைக்கழகப் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்துறைத் தலைவர் பேராசிரியர் எம்.பீ.எம்.இஸ்மாயில் மேற்கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர், KSR College of Arts & Science for Women in India நிறுவனத்தின் உயரதிகாரிகள், பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் மற்றும் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இவ்வமைப்புடனான புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் கற்றல், கற்பித்தல், ஆய்வு மற்றும் புத்தாக்கத் துறைகளில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் பயனடைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் போது ஆசிரிய-மாணவ பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்கள், ஆய்வு மாநாடுகள், ஆய்வு வெளியீடுகள், சான்றிதழ் மற்றும் டிப்ளோமாக பாடநெறிகள், ஆசியர் மற்றும் மாணவர் பயிற்சிகள் உள்ளிட்ட பல ஒன்றினைந்த வேலைத் திட்டங்களை துரிதகதியில் நடைமுறைப்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இது போன்ற புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன்படி ரஷ்யா, துருக்கி, மலேசியா மற்றும் இந்தியா மற்றும் ஆகிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களுடன் எதிர்வரும் காலங்களில் மேலும் பல புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.